கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | திசெம்பர் 15, 2007

சித்திரைக்கண்ணு…செந்தமிழ் பொண்ணு…

சித்திரைக்கண்ணு செந்தமிழ் பொண்ணு
தமிழ் நாட்டின் கண்ணு
சின்னப்பொண்ணு செல்லப்பொண்ணு
அப்பா அம்மா சொல்கேட்டால்
வம்பேதம்மா வம்பேது.

அண்ணன் அக்கா சொல்லைக் கேளு
அடுத்த வீடு அலையாதேம்மா

வாய் பார்த்து அலைபவர்கள்
வம்பு நமக்கு வேண்டாமம்மா

கூடாத வழக்கம் பேசி
கூச்சலிடல் ஆகாதம்மா

அடிக்கடி சினிமா பார்த்தால்
அவலம் நேரும் வயதிதம்மா

உன்னைப்பார்த்து தங்கைகள் தம்பி
உயர்வு தேடிட இருப்பாயம்மா

அடக்கம் என்ற அழகு போதும்
ஆடம்பரம் வேண்டாமம்மா

கண்ணாடி முன்பே நின்று
கவனம் திசை மாறவேண்டாமம்மா

அகத்தழகு இருக்கும் வரை
அகந்தை நம்மை நெருங்காதம்மா

முகத்தழகை பெரிதாய் எண்ணி
மோசம் போக வேண்டாமம்மா

உண்மைத்திறனுடன் வீட்டில் இருந்தால்
ஊர்வம்பு நம்மைத் தீண்டாதம்மா

தையற்கலை பேணி நன்றாய் – என்
தவமகளாய் வாழ்வாயம்மா

தம்பி தங்கைகள் படித்துயர
தகுந்த பாடம் சொல்வாயம்மா

குறைவாய்ப்பேசி நிறைய படித்து
குலமகளாய் திகழ்வாயம்மா

விபரமற்றோர் கூட்டம் என்றால்
வெளியே எட்டி பாராதேம்மா

தாத்தா பாட்டி தவறை மறந்து
தகுந்த உதவி செய்வாயம்மா

தாய் தங்கை தவறு செய்தால்
தகுந்த பொறுமை கொள்வாயம்மா

கெட்ட கதைகள் பேசும் கோளை
கூடிய மட்டும் கேளாதேம்மா

பொலாங்கு நேரும் போதும்
பொறுமையும் அறிவும் வேணுமம்மா

கல்லாத என் கவியில் கூட
கருத்து சிலது இருக்குமம்மா

கொல்லவரும் கவலை கூட
குணத்தழகால் மாருமம்மா

தீராத தொல்லை கூட
தெய்வ பக்தியால் தீருமம்மா

பொல்லாத நோய்கள் ஓட
புதுமை மருந்து குலப் பெண்களம்மா.

நேர்மையான அறிவு கூட
நெஞ்சினிலே இருக்குதம்மா

சிற்பி கையில் கல்லுங்கூட
சிறந்த தெய்வ சிலை ஆகுதம்மா

குட்டிச்சுவர், கரித்துண்டு கூட
குறிப்பு பழமொழி எழுத உதவுதம்மா

ஓவியன் கையில் சாயம் கூட
உயிர்ப் படமாய் மாறுதம்மா

ஏழையின் உழைப்பில் கல் காடுகூட
இனிய சோலையாய் மாறுதம்மா

திறந்த வீட்டில் நாய் நுழையும்
திறந்து வைக்க வேண்டாமம்மா

பசுந்தோல் போர்த்திய புலிகள் உண்டு
பார்த்து நன்றாய் தெரிவாயம்மா

காத்து கருப்பு என்று பூசாரி கூட
கள்ளத்தனத்தில் திரிவானம்மா

உனக்கு மட்டும் சொல்ல வில்லை
உலகில் கதைகள் இதைப்போலம்மா

பிறக்கும் போதே அறிவாய் இருந்தவர்
இந்த புவியில் யாரும் இல்லையம்மா

எந்தன் செல்வங்கள் நீங்களெல்லாம்
ஏமாற்றாமல் ஏமாறாமல் இருங்களம்மா

சின்னவயதிலே சொல்லிப் பழக்கினால்
சீனக்குழந்தையும் தமிழ் போசுமம்மா

பழக்கத்தால் திருந்தி வராத
பக்குவம் உலகில் இல்லையம்மா

உரைக்கும் உண்மை கேட்டு நடந்தால்
அப்பா மிக்க மகிழ்வேனம்மா….

ஃஃஃ


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்