ஏன் தான் அவசரமோ?!…
எனை அழைக்கும் உள்வலியே…
முன்னவர்கள் சொன்ன மொழி
முழு மனமும் உணர்ந்திடவே
முழுஇருட்டும் பவுர்ணமியும்
முறைபோட்டு வாழ்வில் வரும்
குறைநிறைகள் கலந்துவரும்
குவலயத்து வாழ்வு என்று
குறிப்பெழுதி வைத்து விட்டு
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே.
இன்னும் வரும் காலம் பல
இளம் மணிகள் வளம் வளர
இரண்டு வரி எழுதி விட்டு
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே.
தள்ளாமை மெல்ல வரும்
இல்லாமை ஏக்கம் தரும்
பொல்லாமை பொசுங்க வைக்கும்
நல்லாரின் நாவும் சுடும்
எல்லாரும் உணர்ந்து உயர
என்னாலும் இயன்ற படி
இரண்டு வரி எழுதி விட்டு
வருவேன் நான் உனது
மாளிகையின் வாசலுக்கே.
ஃஃஃ
எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 05.11.1985
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ